Pages

வில்வும் மஹாசிவராத்திரியும்

சிவபெருமானுக்கு உகந்த பத்திரமாக வில்வ இலை போற்றப்படுகின்றது.வில்வத்திற்க்கு சமமாக ஆகமங்களில் சில பத்திரங்கள் (இலைகள் )சிவபூஜைக்கு உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இவை வில்வத்தை போன்றே மூன்று இதழ்களை கொண்டதாக விளங்கும்.வில்வத்தோடு சேர்த்து இவைகள் பஞ்சவில்வம் என்று அழைக்கப்படும்.
மூன்று இதழ்கள் கொண்டுவிளங்குவதால் இவைகள் சூலபத்ரம் என்ற பெயரும் உண்டு.

"குந்தாக்யம் சுகபில்வம் ச நிர்ஜீவித கபித்தகம்,
ஏதாநி சூல பத்ராணி பஞ்ச பில்வ மிதி ஸ்ருதம் "
                                -காரணாகமம்.

 குந்தம்           -ஸ்ரீ முல்லை இலை.
சுகபத்ரம்         -ஸ்ரீ கிளுவை இலை.
  பில்வம்           -ஸ்ரீ வில்வ இலை.
நிர்ஜீவிதம்       -ஸ்ரீ வெண்நொச்சி இலை.
கபித்தம்            - ஸ்ரீ விளாமர விலை

  இவை ஐந்தும் பஞ்சவில்வம் என்று போற்றப்படுகின்றது.இவை ஐந்தும் கொண்டு சிவப்பரம்பொருளின் ஐம்முகங்களுக்கும் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகப்பெரும் சிவ புண்ணியமாகும்.

மேலும், முல்லை பத்ரம் இல்லாது மாவிலங்கை பத்ரம் பயன் படுத்துவதும் நூலில் உள்ளது.

புஷ்பவிதி நூல்,

மெச்சியேயடியவர்வியந்து
சாத்திடு
நொச்சியேநறுவிளாநுவன்ற
கூவிளம்
வைச்சிடுங்கிளுவையே
மாவிலிங்கையின்
பச்சிலையென்றிவைபஞ்ச
வில்வமே

என்று கூறுகின்றது.

    வில்வம் கொண்டு ஒருவன் உண்மை பக்தியோடு சிவபூஜை  செய்வானாகில், அந்நிமிடம் அவனுடைய அனைத்து பாபங்களும் பொசுங்கிவிடுகின்றது.

"மாதா பித்ரோச்ச மித்ரஸ்ய பசூநாம் பிருத்யகஸ்ய ச,
சிசோர் வதம் கிருதம் பாபம் அன்யத் ஸர்வம் ததைவச,
சிவார்ச்சிதேந பில்வேந வ்யபோஹதி நசம்சய: "

     பரமனுக்கு அர்ச்சனை செய்த வில்வத்தின் மகிமைப் பயனால், தாய், தந்தை, நண்பன், கர்பசிசு, குழந்தை இவர்களை கொன்ற தீங்கிழைத்த பாபங்களும்,மற்ற   அனைத்துவித பாபங்களும்,  தோஷங்களும் அப்போதே, அக்கணமே நீங்குகின்றது.

    ஒரு மனிதன் தன் சக்திக்கு தகுந்தவாறு கோயிலுக்கு அறப்பணி செய்யவேண்டும்.தன் சக்தி என்பது அவரவர் மனம் அறியும்.

  அவ்வகையில் சிவராத்திரி அன்று  எளியோர்கள் ஒரு தீபம் ஏற்றுங்கள்,  ஆலயத்திற்க்கு சுத்தமான நல்ல வில்வ பத்திரங்களை தாருங்கள்.அது போதும்.

  வீட்டில் வில்வ இலைக்கொண்டு மனதார பக்தியோடு சிவபிரானை  பூஜியுங்கள்.வாரி வழங்கி அருள்புரிவான் பரமேஸ்வரன்.
சிவார்ப்பணம்