தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. அவை பத்துமலை, தண்ணீர்மலை, கல்லு மலை ஆகும்.
கோலாலம்பூர் பத்துமலை :
மலேசியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் புகழ்பெற்றதாகவும், உலக அளவில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாகவும் திகழ்வது, கோலாம் பூரில் அமைந்துள்ள பத்துமலை முருகன் ஆலயம் ஆகும். இங்கு மூலவராக விளங்குவது, வேல் மட்டுமே. இம்மலை சுண்ணாம்புக் கற்களால் ஊசிப்பாறைகள் கொண்டு உருவான இயற்கை குகையாகும்.
அமைவிடம்:
மலேசிய நாட்டின் தலைநகரமாய் திகழும் கோலாலம்பூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் பத்துமலை அமைந்துள்ளது. இது சிலாங்கூர் மாநிலம், கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பினாங்கு_தண்ணீர்மலை:
மலேசிய நாட்டின் தனித்தீவு நகரம் பினாங்கு. மாலாக்கா நீரிணையில் அமைந்த நிலப்பகுதி. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுன். இதில் உள்ளது தண்ணீர்மலை முருகன் ஆலயம்.
சோழமன்னன் வென்ற கடாரம் என்ற ஊர், இத்தீவின் அருகேயுள்ள கிடா என்ற மாநிலத்தில் அமைந்துள்ளது. நகரத்தார் அதிகம் வாழும் பகுதியாக பினாங்கும், கோலாலம்பூரும் திகழ்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் நகரத்தார் தங்களுக்கென தனி பாலதண்டாயுதபாணி ஆலயத்தை எளிமையாகத் தொடங்கி, ஐந்து ஏக்கர் பரப்பில் தண்ணீர்மலை அடிவாரத்தில் தனி ஆலயம் அமைத்துள்ளனர்.
ஈப்போ_கல்லுமலை:
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து வடக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கிய நகரம் ஈப்போ.
இங்கே மிகவும் பழைமையான சுப்பிரமணியர் ஆலயம், சென்ரோ மலைக்குகையில் இருந்து வந்தது. கி.பி. 1889-ல் நிலச்சரிவு விபத்தால் மலையடிவாரத்திற்கு கி.பி. 1930-ல் இடம் பெயர்ந்த இவ்வாலயம், இன்று கம்பீரமாய் எழுந்து நிற்கிறது.
இவ்வாலயத்தில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து, அலகுக் குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
ஈப்போ நகரில் குனோங்கிலோ பகுதியில், ஜாலான் ராஜா மூசா அசீஸ் சாலையில் கல்லுமலையின் அடிவாரத்தில், கிந்தா நதிக்கரையோரம் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது.